மாயமான கணவரை கண்டுபிடிக்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை பெண்..!

222 0

இலங்கையில் இருந்து 33 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தமிழகத்திற்கு சென்று மாயமான தன் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை பெண் ஒருவர் மனு கொடுத்துள்ளார்.

இலங்கையின் திருகோணமலை, பாலையூத்தைச் சேர்ந்தவர் வசந்தி இவர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் வந்து, திருகோணமலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்த முகமது யூசுப். ஆகிய இருவரும் காதலித்து, 1979ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 23ம் திகதி திருமணம் செய்துள்ளனர்.

இரண்டு குழந்தைகள் பிறந்து வளர்ந்த நிலையில், நாகூரில் வசிக்கும் உறவினர்களை பார்த்து விட்டு வருவதாகக் கூறி, 1986ம் ஆண்டு முகமது யூசுப் தமிழகத்திற்கு சென்றுள்ளார்.

அதன்பின், அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த வசந்தி, மகன் வசந்தன் (34), மகள் உஷா (32), ஆகியோரை வளர்த்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

பல ஆண்டுகள் கடந்த நிலையில், தனக்கும் வயதாகி கொண்டே இருப்பதால், நாகூர் பகுதியில் விசாரித்தால் கணவரை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் வசந்தி, கடந்த 3ம் தேதி நாகூர் சென்றுள்ளார்.

பல இடங்களில் விசாரித்தும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வசந்தி, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை நேற்று சந்தித்து மனு கொடுத்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின்  அறிவுறுத்தல்படி, கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, நாகை எஸ்.பி. அலுவலகத்திலும் குறித்த பெண் புகார் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.