இந்தியா ஏன் கொலைகளை கொண்டாடுகின்றது?

425 0

பிபிசி

தமிழில் ரஜீபன்

இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர்  படுகொலை செய்தவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்தமை இந்தியா முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் அந்த இடத்தில் கூடிய 2000ற்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரை பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள்.

பொலிஸார் வாழ்க என கோசமிட்ட அவர்கள் இனிப்புகளை வழங்கியதுடன் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலும், 27 வயது மருத்துவரின்  உடல் மீட்கப்பட்ட பகுதியிலும் மலர்களை தூவினர்.

பெண் மருத்துவரின் பகுதியிலும் பெருமளவானவர்கள் திரண்டு இந்த கொலையை கொண்;டாடினர்,வெடிகொழுத்தினர் இனிப்புகளை வழங்கினர்.

இணையங்களிலும்  வாழ்த்துக்களும் கொண்டாட்டங்களும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு ஆதரவு தொடர்கின்றது.

டுவிட்டரில் இந்த துப்பாக்கி மற்றும் குற்றச்செயல் தொடர்பில் 3000ற்கு மேற்பட்ட டுவிட்களும் பல ஹாஸ்டாக்குகளும் காணப்படுகின்றன.அனேகமானவர்கள் பொலிஸாரிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

இதற்கான காரணம்ஒன்று உள்ளது.

இந்தியாவின் நீதித்துறையின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன,இதன் காரணமாக தீர்ப்பு வழங்குவதற்கு பல வருடங்களும் சில வேளைகளில் தசாப்தமும் எடுக்கின்றது.

2012 இல் புதுடில்லியில்இளம்பெண்ணொருவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவமே இதற்கான சமீபத்தைய உதாரணமாக உள்ளது.

அந்த ஈவிரக்கமற்ற குற்றச்செயல் உலக நாடுகளின் தலையங்கமாகியது,புதுடில்லியிலும் ஏனைய பகுதிகளிலும் நாளாந்தம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அபூர்வமான சம்பவங்களில் மரண தண்டனை விதிப்பது உட்பட சட்டங்களில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கு  அரசாங்கம் தள்ளப்பட்டது.

ஆனால் தனது 23 வயது மகளிற்கு நீதி வழங்கும் விடயத்தில் நீதித்துறையின் சக்கரங்கள் மிகமெதுவாகவே இயங்கியுள்ளன என தெரிவிக்கின்றார்,புதுடில்லி நிர்பயாவின் தாய் ஆசா தேவி.

தனது மகளின் படுகொலைக்கு காரணமானவர்கள் தற்போது மரணதண்டனையை எதிர்கொண்டுள்ள போதிலும், அவர்கள் மரணதண்டனை நிறைவேற்றத்தை தாமதமாக்குவதற்காக சட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் எப்படி தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர் என அவர்  விபரிக்கின்றார்.

இதன் காரணமாக ஹைதராபாத் பொலிஸாரின் நடவடிக்கையை உடனடியாக வரவேற்றவர்களில் இவரும் ஒருவர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

மிகமோசமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிவழங்குவதற்கு இந்திய அமைப்பு முறை தவறிவிட்டது என விரக்தியடைந்துள்ளவர்களிற்கான உதாரணமாக அவர் காணப்படுகின்றார்.

ஹைதராபாத் சம்பவம் குறித்து கடந்த வாரம் செய்திகள் வெளியான பின்னர் பலர் தங்கள் விரக்தியை வெளியிட்டிருந்தனர்.பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பலவருடங்களிற்கு எங்கள் வரிகளை விழுங்கிக்கொண்டிருப்பார்கள், அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின்  பெற்றோர்கள் நீதிக்காக ஒவ்வொரு படியாக ஏறியிறங்கிக்கொண்டிருப்பார்கள் என கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இந்த நம்பிக்கையிழப்பே உடனடி நீதி வழங்கவேண்டும் பல இந்தியர்கள் வேண்டுகோள் விடுப்பதற்கும் விரும்புவதற்கும் காரணமாக உள்ளது.

இந்த எதிர்பார்ப்பே சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபடும் கதாநாயகர்கள் குறித்த திரைப்படங்கள் சமீபத்தில் பெரும்வெற்றி பெறுவதற்கும்காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை நேற்றைய கொலைகுறித்து கேள்வி எழுப்பும் சிலரும் உள்ளனர்,விசாரணை இன்றி கொலைகள் இடம்பெற்றதாக அவர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர்.

சட்டத்தை மதிக்காத எப்போதும் துப்பாக்கி பிரயோகத்தைமேற்கொள்வது மகிழ்ச்சியடையும் பொலிஸார் நாங்கள் தேடும் பதில் இல்லை என்கின்றார் பேராசிரியர் கண்ணபிரான்.

வேண்டுமென்று கொலை செய்வதன் மூலமோ அல்லது பழிவாங்கும் இரத்த படலம் மூலமோ  நீதிநிலைநாட்டப்படுவதில்லை,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் துயரங்கள் நீதியின் பாதையை தீர்மானிப்பதில்லை என்கின்றார் அவர்.

 

பாதிக்கப்பட்டவர்களின்  துயரம் மற்றும் வலி மிகுந்த தருணத்தில்  அவர்களிற்கு ஆதரவை வழங்குவதிலும், சந்தேகநபர்களையும் குற்றம்சாட்டப்பட்டவர்களையும் உறுதியான விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என வற்புறுத்துவதிலுமே நீதி தங்கியுள்ளது என்கின்றார் அவர்.

முன்னாள் காவல்துறை அதிகாரியான பிரகாஸ் சிங் கொலைகள் முற்றாக தவிர்க்கப்படக்கூடியவை என பிபிசிக்கு தெரிவித்தார்.

சில சட்ட நிபுணர்கள் இது அரசமைப்பிற்கு முரணானது என தெரிவித்ததுடன்  உண்மையிலேயே நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதா என கேள்வி எழுப்பினர்.

சிலர் காவல்துறையினர் சரியானவர்களை கைதுசெய்துள்ளனரா , அப்பாவிகளை சிக்கவைத்துள்ளனரா எனவும் கேள்விஎழுப்பினர்.

ஒருவர்துப்பாக்கியை பறிக்க முயன்றார் என்றால் ஏன் ஏனைய அனைவரின் மீது துப்பாக்கி பிரயோகித்தினை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என  சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் அவ்வாறான குரல்கள் குறைவாகவே உள்ளன.