மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க.செந்தூர்பதி ராஜா தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக செந்தூர்பதி ராஜா மேலும் கூறுகையில், “கடந்த இரு மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனைய மாதங்களில் குறைந்தளவில் காணப்படுகின்றது.
இந்த ஆண்டில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக காணப்படுகின்றது.
எனவே மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து டெங்கு நுளம்பின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வீடுகள், நடமாடும் பகுதிகள், பொது இடங்கள் போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை கண்டு, அழிப்பதன் மூலம் டெங்கு நுளம்பின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மக்கள் பொறுப்புடன் செயற்படுவதன் மூலமே டெங்கு நுளம்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். மன்னார் மாவட்டத்தில் 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு காணப்படுகின்றது.
இதில் மன்னார், நானாட்டான் ஆகிய இரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் ஒப்பீட்டளவில் கணிசமமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் மன்னார் பகுதியில் அதிக அளவு டெங்கு நோயளர்கள் காணப்படுகின்றார்கள்.ஏனைய பிரதேசங்களில் குறைந்த அளவு நோயளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கட்டுப்பாட்டு முறைகள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலில் குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அரசாங்க அதிபரின் ஒத்துழைப்புடன் அந்தந்த பிரதேசச் செயலக பிரதேச செயலாளர்களின் உதவியுடன் அவற்றின் கீழ் இயங்குகின்ற கிராம சேவையாளர்கள் ஆகியோரின் உதவியுடன் அந்தந்த பிரதேசங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை நேற்று (வியாழக்கிழமை), மன்னார் பொது வைத்தியசாலையில் டெங்கு நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எனினும் இவருடைய மரணம் டெங்கு நோயினால் மாத்திரமா இடம்பெற்றது என்பதனை உறுதிபடுத்த முடியவில்லை. இவருடைய இரத்த பரிசோதனைகள் பாரதூரமான கிருமி தொற்று நிலையை காட்டியுள்ளது.
சரியான முடிவை சில தினங்களின் பின்பே எம்மால் அறிவிக்க முடியும். பொதுமக்கள் தமது பொறுப்பை உணர்ந்து உங்கள் பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் அற்ற தன்மையை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

