பியர்ல் ஹார்பர் துப்பாக்கி சூடு- இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்

253 0

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படை தளம் உள்ளது. இங்கு அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை கூட்டுப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கப்பல் கட்டும் தளத்திற்குள் இன்று திடீரென நுழைந்த கடற்படை வீரர் ஒருவர், அங்கிருந்த  பணியாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்திற்கு பின் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கி சூடு நடந்தபோது இந்திய விமானப்படை தளபதி பதாரியா மற்றும் இந்திய விமானப்படையினர் அங்கு இருந்துள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை தளம் தற்காலிமாக மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.