இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் (CEWET) வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த. உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
க.பொ.த. சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள், பெற்றோர்களது சமீபத்தைய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் நிகழற் பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அல்லது விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம், 36-38, காலி வீதி, கொழும்பு 3 மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலயம், இல. 31, ரஜபிகில்ல மாவத்தை, கண்டி ஆகிய இடங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், CEWET மே/பா, இந்திய உயர் ஸ்தானி கராலயம், த.பெ.எண். 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு எதிர்வரும் 27ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கிடைக்கும் வகை யில் அனுப்பப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.