சமூக வலைத்தளங்களுக்கு விசேட ஊடகப் பிரிவு- அமைச்சர் யாபா

251 0

நாட்டில் இயங்கும் சமூக வலைத்தளங்களின் வசதிக்காக தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகப் பிரிவொன்று வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படுமென தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சராக நேற்று (29) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அரசாங்க தகவல் திணைக்களத்தில் அவர் நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

அரச ஊடக நிறுவனங்களின் தரத்தையும் பிரபல்யத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு பொருத்தமான நபர்கள் நியமிக்கப்படுவார்கள். ஊடக தர்மத்தை பின்பற்ற வேண்டிய கடமை ஊடக நிறுவனங்களுக்கு உள்ளன.

சமூக வலைத்தளங்கள் பலம் படைத்தவை என்கின்றபோதும் அவற்றின் தரம் உயர்த்தப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார். அதனால் அவற்றின் தரத்தை உயர்த்தி ஊடக தர்மத்தை முறையாக நெறிப்படுத்துவது இப்பிரிவின் மூலம் உறுதி செய்யப்படுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.