ஹாங்காங் எங்கள் பகுதிதான்: சீனா திட்டவட்டம்

318 0

சீனாவின் ஒரு பகுதிதான் ஹாங்காங் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் நடந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஜனநாயக ஆதரவாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

திங்கட்கிழமை வெளியான ஆரம்ப தேர்தல் முடிவுகளில் அரசுக்கு ஆதரவான பிரதிநிதிகள் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் சுமார் 95% ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சந்தித்துவிட்டு ஹாங்காங் தேர்தல் குறித்து பத்திரிகையாளர்களிடம் வாங் யீ பேசும்போது, “
” இது தேர்தலில் இறுதிகட்ட முடிவு அல்ல. இறுதி தேர்தல் முடிவு வரும்வரை காத்திருப்போம்.

 

எது நடந்தாலும் ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதிதான். ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மையை சேதப்படுவதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது” என்றார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, சீனாவின் சிறப்பு நிர்வாக மண்டலமாக இணைக்கப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும், தன்னாட்சி பொருந்திய பிராந்தியமாகவே விளங்கி வருகிறது.

இந்நிலையில், கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்க ஏதுவாக ஒரு சட்டத்திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போலீஸாரின் அடக்குமுறைக்கு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்றது.

இந்த சூழலில், சர்ச்சைக்குரிய இந்த மசோதா முழுவதுமாக திரும்பப் பெறப்படுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். எனினும் ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கவுன்சில் தேர்தலில் பெரும் வெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர்.