வேடந்தாங்கலில் இருந்து மேல்மருவத்தூர் ஏரிக்கு இடம்பெயர்ந்த பறவைகள்: பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் கோயில் நிர்வாகம்

281 0

வேடந்தாங்கல் ஏரியில் போதிய அளவு நீர் இல்லாததால் அங்கு வந்த பறவைகள் மேல்மருவத்தூர் ஏரிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து அந்தப் பறவைகளை பாதுகாக்கும் வகையில் மேல்மருவத்தூர் ஏரியில் பராமரிப்பு பணிகள் மேல்மருவத்தூர் கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஞ்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பறவைகள் சரணா லயமாக வேடந்தாங்கல் சரணாலயம் இருந்து வருகிறது.

இந்த சரணாலயத்துக்கு சீச னுக்கு பல்வேறு வெளிநாட்டுப் பறவைகள், உள்நாட்டுப் பறவை கள் வரும். ஆனால், கடந்த 2 ஆண் டுகளாக இந்த ஏரிக்குத் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அதிக அளவிலான பறவைகள் இந்த ஏரிக்கு வரவில்லை. வந்த சில பறவைகளும் அங்கிருந்து இடம் பெயர்ந்தன.

இந்தச் சூழ்நிலையில் அருகில் உள்ள மேல்மருவத்தூர் ஏரியில் அதிக தண்ணீர் இருப்பதால் பல பறவைகள் அந்த ஏரிக்கு வந்துள்ளன. அந்த ஏரியில் உள்ள மரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடு கட்டியுள்ளன. தொடர்ந்து பல பறவைகள் வந்துகொண்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் அந்த ஏரியை பராமரிக்கும் பணிகளில் மேல் மருவத்தூர் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.சிறிய படகு மூலம் ஏரிக்குள் சென்றுஅந்த ஏரியில் உள்ள பாசிகள்,தேவையற்ற செடிகளைக் சில வாரங்களாக அகற்றி வருகின்றனர்.