எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
மேலும் வடக்கு, கிழக்கு மக்கள் எமக்கு அதிகமாக வாக்களிக்கவில்லை. எனினும் அந்த மக்களின் தேவை என்ன? அவர்களின் பிரச்சினைகள் என்ன? என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட அவதானம் செலுத்தப்படும் என்றும் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்காக இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் அமோகமாக கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
தற்போது புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார். பதவியில் உள்ள அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதால் புதிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும்.
நாங்கள் உடனடியாக பாராளுமன்ற தேர்தலுக்கு செல்லவே முயற்சிக்கின்றோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தலுக்கு செல்வதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரியவில்லை.
எனவே எதிர்வரும் மார்ச் மாதம் வரை இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதில் அமைச்சரவை ஒன்றும் இருக்கும்.
இந்த இடைக்கால அரசாங்கத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கவனம் செலுத்தப்படும். நல்லாட்சி அரசாங்கத்தினால் பொருளாதாரம் பலப்படுத்தப்படவில்லை. பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர்கின்றது. எனவே பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டும்.
இதேவேளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களின் அமோக ஆதரவு எமக்கு கிடைக்கவில்லை. எனவே அந்த மக்களின் அடிப்படை தேவை மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் ஆராயவேண்டியுள்ளது. இது தொடர்பில் எமது அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும். அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்றார்.