திருகோணமலை மாவட்டத்தின் ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட எட்டுபேரை நேற்றிரவு (20) பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்துள்ளதாக ஜயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கந்தளாய், ஜயந்திபுர,அக்போபுர மற்றும் மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த எட்டுபேரைக் கைது செய்துள்ளதாகவும் இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் ஜயந்திபுர பகுதியிலுள்ள வீடொன்றின் பின் பகுதியில் புதையல் தோண்டி வந்த நிலையிலே விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் எட்டு சந்தேக நபர்களையும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய மண்வெட்டி,பிக்காஸ்,அலவாங்கு, கூடைகள்,இரும்புக் கூறுகள் மற்றும் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய பூஜை பொருட்கள் அனைத்தையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர்களையும், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஜயந்திபுர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதோடு ,பொலிஸார் சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

