ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை கொண்டுசெல்வதா அல்லது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தலைமையில் காபந்து அரசாங்கத்தை அமைப்பதா என்ற தீர்மானம் எடுக்கும் அவசர பாராளுமன்ற கட்சி தலைவர் கூட்டம் ஒன்று இன்று காலை சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது.
அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர் அரசாங்கத்தை கொண்டு செல்வதில் நெருக்கடி நிலைமைகளில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையில் காபந்து அரசாங்கம் ஒன்றினை கொண்டுசெல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து ஆராயும் வகையில் விசேட கட்சி தலைவர் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகின்றது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி தலைவர்களுக்கும் சபாநாயகர் இன்று அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைய இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இது குறித்து தற்போதைய எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் தினேஷ் குணவர்தன குறிப்பிடுகையில்- 19ஆம் திருத்தத்திற்கு அமைய பாராளுமன்றத்தை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கலைக்க முடியாது என்றார்.

