மொட்டுக்கு வாக்களித்து முதலைக்கு இரையாகப் போகிறீர்களா? அல்லது அன்னத்திற்கு வாக்களித்து அன்னமுண்டு அழகாக வாழப்போகிறீர்களா? நீங்களே முடிவெடுங்கள் என்று அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் நேற்று விநாயகபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,
வெள்ளைவான் சாரதி கூறிய கருத்துக்களைக் கேட்கும்போது இந்த உலகில் கம்போடியாவை விட மிகவும் கொடூரமான சித்திரவதை அட்டூழியம் நிறைந்த கொடூரத்தை இலங்கையில் செய்திருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது. தெரிந்தே முதலைகளுக்கு 300 பேரை இரையாக்கினார். இதுபோல் இன்னும் எத்தனை ஆயிரம் மக்களை இவ்வாறு கொன்று குவித்துள்ளார்களோ தெரியாது. காணாமல் போனவர்களும் இதற்குள் உள்ளடக்கமோ தெரியாது. அப்படிப்பட்டவர்களை மீண்டும் ஆட்சிபீடத்தில் ஏற்றுவது நல்லதா? மீண்டும் கொடூரமான யுகமொன்றுக்கு நாங்களே வழிவகுத்தவர்களாவோம்.
சஜித் ஜனாதிபதியானால், இந்த அழகான இலங்கைத்தீவு மனிதாபிமானமுள்ள ஊழலற்ற சர்வாதிகாரமற்ற குடும்ப ஆட்சியற்ற சமாதானம் நிலவும் புண்ணிய பூமியாக மாறும். உண்மையில் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அவர் தோற்றால் ஒட்டுமொத்த இலங்கையனும் தோற்றதற்கு சமன். மீண்டும் அடிமைச் சமூகம் உருவாக வழிவகுக்கும். ஊழலும் அராஜகமும் தலைவிரித்தாடும். அதாவது மீண்டும் இருண்ட யுகமொன்று உருவாகும். 1983களிலிருந்து தமிழ்மக்கள் பல யுத்தங்களைக் கண்டவர்கள். துன்பத்துக்குள்ளாகி பல வலிகளை உணர்ந்தவர்கள். கிறீஸ் மனிதன் யுகத்தை கண்டவர்கள்.
சஜித் மனிதாபிமானத்துடன் அபிவிருத்திகளை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள். வாழ்வு சிறக்கும் என்றார்.

