இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்குப் பதிவுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அது தொடர்பிலான பூரண பலத்த பாதுகாப்பு திட்டமொன்றினை பொலிஸ் திணைக்களம் தயார் செய்துள்ளது.
60 ஆயிரத்து 175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு படையினரை உள்ளடக்கியதாக இந்த விஷேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் குறித்த அனைத்து கடமைகளையும் இந்த படையினரை வைத்து முன்னெடுக்க பூரண திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
லிஸ் தலைமையகத்தில் இது குறித்து விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தியே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் இந்த பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினருக்கு மேலதிகமாக எஸ்.ரீ.எப். எனப்படும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் எந்த வேளையிலும் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பின் போதும், ஏனைய பாதுகாப்பு திட்டங்களை அமுல் செய்யும்போதும் தேவை ஏற்படின் ஆயுதங்களை பயன்படுத்தவும் பலப் பிரயோகம் செய்யவும் தெளிவான ஆலோசனை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.

