பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட இருவருக்கு விளக்கமறியல்

369 0

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுஹெந்த சந்தியில் வீதிப் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை (09) கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு விளக்கமறயிலில் வைக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுஹெந்த சந்தியில் வீதிப் பாதுகாப்புக் கடமையில் இருந்த போது நாத்தாண்டிய பகுதியில் இருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த லொறியொன்றை சோதனைக்கு உட்படுத்துவதற்காக தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த லொறியின் சாரதி பொலிஸாரின் சமிஞ்கைகளை பெருட்படுத்தாமல் லொறியை மிகவும் வேகமாக செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, குறித்த திசையை நோக்கி பொலிஸ் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸார் குறித்த லொறியை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் குறித்த லொறியில் மாடுகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் லொறியை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த பொலிஸாருக்கு 500 ரூபா தாள்கள் இரண்டு இலஞ்சமாகக் கொடுக்க முற்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், அவர்கள் பயணித்த லொறி மற்றும் மாடுகள் என்பனவற்றையும் பொலிஸில் தடுத்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மாரவில நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது நாளை திங்கட்கிழமை (11) வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.