எனது ஆட்சியில் எல்லோரும் இலங்கையர் என்ற கோட்பாட்டை பின்பற்றுவேன் – மினுவாங்கொடையில் சஜித்

377 0

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலை அடுத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்முறை காரணமாக மினுவாங்கொடை நகரிலுள்ள  கடைகள் மே 13 இல்  எரிக்கப்பட்டன. இதோ எமக்கு முன்னால் உள்ள பள்ளிவாசலும் தாக்கப்பட்டது. 

 

எனது ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இது போன்ற ஈனச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என, புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மினுவாங்கொடை நகரில் எலிஸ்பார்க் மைதானத்தில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான எட்வர்ட் குணசேகர தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் அவர் இவ்வாறு  கருத்துத் தெரிவித்தார்.

பாரிய சுதந்திர வர்த்தக வலயம் அமையப்பெற்றுள்ள கம்பஹா மாவட்டத்தில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை உணர்கிறேன். இதில் மினுவாங்கொடை மிக நீண்ட காலமாக கவனிக்கப்படாத தொகுதியாகவே காணப்படுகிறது. அந்தக் குறைபாட்டை நிச்சயம் நான் நிவர்த்தி செய்து தருவேன்.

மினுவாங்கொடை நகரை நவீன நகரமாக மாற்றி பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையச் செய்து, இங்கு கைத்தொழில் பேட்டை ஒன்றையும் பெற்றுக் கொடுப்பேன். இதன்மூலம், வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பேன்.

நான் எனது தந்தை வழியில் தூய்மையான அரசியலைச் செய்யவே விரும்புகின்றேன். மக்கள் சேவகனாகவே என்றும் நான் இருந்து, வாக்குறுதிக் கலாசாரத்தை விட செயற்பாட்டுக் கலாசாரத்தையே முன்னெடுப்பேன்.

எனது ஆட்சியில் இன, மத, மொழி வேறுபாட்டுக்கு இடமளிக்கமாட்டேன். எல்லோரும் இலங்கையர்கள் என்ற கோட்பாட்டை நானும், நீங்களும், எல்லோரும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான், எமக்கும் நாட்டுக்கும் மீண்டெழ முடியும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.