மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான தமது நிலைப்பாட்டை சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் அறிவிக்க வேண்டுமென கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் தொடர்பாக கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
சகல மாகாணசபைகளினதும் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைந்துள்ளது. சில மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்து வருடக்கணக்காகின்ற போதும் அவற்றிற்கான தேர்தலை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகிவிட்டன. துரதிஷ்டவசமாக ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னரும் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக சிந்திக்காமல் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான விடயங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆட்சிக்காலம் முடிவடைந்த பின்னரும் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் தொடர்ந்து பிற்போடுவதானது ஜனநாயகத்தை பாதிக்கும் செயலாக அமையும்.
குறிப்பாக ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றும் கூறலாம். ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று பிரசார மேடைகளில் பல விடயங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் மாகாண சபை தேர்தல் தொடர்பாக இதுவரை எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை.
இதனூடாக மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவர்கள் எவ்வித அக்கறையும் இன்றி காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆகையால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் மாகாண சபை தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.