பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 12-ம் ஆண்டு வணக்கநிகழ்வு!

574 0

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாகூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் நேற்று (01.11.2019 ) வெள்ளிக்கிழமை பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது.
பொதுச்சுடரினை லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத்தின் உபசெயலாளர் திருமதி தர்சினி சுதாகர் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 26.12.2007 அன்று வீரகாவியமான கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரர் ஏற்றிவைத்தார். பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் திருஉருவச்சிலைக்கும் கேணல் பரிதி அவர்களின் திரு உருவப் படத்திற்கும் கேணல் பரிதி அவர்களின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர்கள் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர். அடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
லாக்கூர்நொவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி குத்தோ றுசெல்,
லாக்கூர்நோவ் உதவி நகரசபைத் தலைவர் கோறின் கதாயி, லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் மிசெல் கோன், இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வன் நிந்துலன், லாக்கூர்நோவ் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர் திரு.புவனேஸ்வரராஜா ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் லாக்கூர்நோவ் மாகரசபையின் உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வணக்கத்தைத் தெரிவித்திருந்தனர்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரம் முழங்க நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு )