சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே சஜித்தை ஆதரிக்கிறோம் – ரிஷாட்

323 0

சமூகத்தின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் கருத்தில்கொண்டே ஓரணியில் செயற்பட்டு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று அச்சடித்து கொண்ட ஒருவர், முஸ்லிம் வாக்குகளை எப்படியாவது சிதறடித்து தனக்கு விருப்பமான வேட்பாளரை வெற்றிப்பெற செய்யவேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் தான் போட்டி நிகழ்கின்றது. இனவாதிகளுடன் ஒருவர் நிற்கின்றார். பல்வேறு சமூகங்களை பிரநிதித்துவப்படுத்துகின்ற தலைமைகளும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அடுத்த வேட்பாளருடன் நிற்கின்றனர்.

பத்து வருடங்களாக முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியை தொலைத்தவர்கள்,நிம்மதியாக வாழவிடாதவர்கள் மார்க்க கடமைகளை சுமூகமாக பின்பற்ற தடையாக இருந்தவர்கள் ஆகியோருடன் இணைந்துள்ள வேட்பாளர்களுக்கு நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்.

சிங்கள பிரதேசங்களில் அப்பட்டமான இனவாதத்தையும்,துவேசத்தையும் விதைப்பவர்கள் சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களுக்கு வந்து இன ஐக்கியத்தை போதிக்கின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.