சூளைமேட்டில் இளம்பெண்ணின் கண் பார்வையை பறித்த தீபாவளி பட்டாசு

209 0

சென்னை சூளைமேட்டில் தீபாவளி தினத்தன்று வெடித்த பட்டாசு இளம்பெண்ணின் கண் பார்வையை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரும்பாக்கம் அன்னை சத்தியா நகரைச் சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி கலைவாணி. தீபாவளி அன்று இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த பட்டாசு கலைவாணியின் முகத்தில் விழுந்து வெடித்தது. இதில் அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார்.

தீக்காயம் அடைந்த கண்ணின் பார்வையில் குறைபாடு இருப்பதுபோல தெரிந்தது. இதையடுத்து கலைவாணி ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது அது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலைவாணி சூளைமேடு போலீசில் புகார் செய்தார். அதில் தீபாவளி அன்று யாரோ தூக்கி வீசிய பட்டாசு வெடித்ததில் எனது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கலைவாணி குறிப்பிட்ட இடத்தில் பட்டாசு வெடித்தவர்கள் யார் – யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.