புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளிப்படுத்தி ஒன்றிணைந்திருக்கின்ற நிலையில், பழங்குடி ஆதிவாசிகள் குழுவொன்றும் நேற்றைய தினம் சஜித்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டனர்.

 

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று

புதிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மகாஓயா மற்றும் அம்பாறை பிரதேசங்களைச் சேர்ந்த பழங்குடி ஆதிவாசிகள், சஜித் பிரேமதாஸவிற்கான தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட திஸ்ஸ அத்தநாயக கூறியதாவது:

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து தற்போதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் எம்முடன் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அதேவேளை சிவில் சமூக அமைப்புக்களும் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றன.

எனவே குறித்தவொரு குழுவினருடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பல்வேறு தரப்பினரையும் எம்மோடு இணைத்துக்கொண்டு நாட்டை முன்நோக்கிப் பயணிக்கச் செய்வதே எம்முடைய ஒரே நோக்கமாக இருக்கின்றது. ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவைப் பொறுத்தவரை எவ்வாறேனும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை மாத்திரமே இலக்காகக் கொண்டிருக்கிறார்கள்.

எனினும் சஜித் பிரேமதாஸ சாதாரண வறிய மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, அந்த சமூகத்தினருக்கு அவசியமான உதவிகளை வழங்கி, சுபீட்சமானதொரு இலங்கையை உருவாக்க முயற்சிக்கின்றார் என அவர் இதன்போது தெரிவித்தார்.