கடந்த 4 ஆண்டுகளாக நாட்டின் முதுகெலும்பை நல்லாட்சி அரசாங்கம் அழித்துள்ளது – பீரிஸ்

429 0

நல்லாட்சி அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில், நாட்டின் முதுகெலும்பாக இருந்த விவசாயப் பொருளாதாரத்தை அழித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

விவசாயத்தின் மூலம் விவசாயிகள் நல்ல வருமானத்தை ஈட்டவும் அவர்களது குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழக்கூடிய சூழல் அன்று காணப்பட்டது என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஆனால் இன்று விவசாயிகள் அனைத்தையும் இழந்துவிட்டனர் என்றும் இது அவர்களின் தவறோ அல்லது சுற்றுச்சூழலின் தவறோ அல்ல என தெரிவித்த ஜி.எல்.பீரிஸ் இவை அனைத்திற்கும் நல்லாட்சி அரசாங்கமே காரணம் என கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வலுவான தலைமையுடன் அந்த நிலைமையை மாற்றியமைக்க முடியும் என்றும் எவ்வாறாயினும் நவம்பர் 17 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டு மக்கள் அத்தகைய தலைமையைப் பெறுவார்கள் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.