புத்தளம் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்புவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் 2 கிலோ கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற இருவர் நேற்று புதன்கிழமை (24) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30, 32 வயதுடைய நபர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்ற நேற்று புதன்கிழமை (23) பிற்பகல் 1.30 மணிக்கு கொச்சிக்கடை தோப்புவ வீதியில் பயணித்த லொறியொன்றை வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த லொறியை சோதனை செய்த போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் பயணித்த குறித்த லொறியில் மிகவும் சூட்சகமான முறையில் கஞ்சாப் பொதியை மறைத்து சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதுதொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

