ராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு- சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது போலீஸ்

193 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். கஞ்சனூரில் பிரச்சாரம் செய்தபோது பேசிய சீமான், முன்னாள் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசினார். ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என சீமான் பேசினார்.

சீமான் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தியது.  சென்னையில் சீமானின் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கிரஸ் சார்பில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.