இரண்டு தேசிய கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைப்பது இலங்கைக்கு பொருத்தமானதல்ல-இராதா

289 0

இரண்டு தேசிய கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைப்பது இலங்கைக்கு பொருத்தமானதல்ல என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீரற்ற காலநிலை காரணமாக பொகவந்தலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த அமைச்சர் இராதாகிருஷ்ணன், அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கது. ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பெற செய்ய யார் வந்து இணைந்தாலும் தவறு இல்லை. ஆகையால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபினையும் இல்லை.

அத்தோடு 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு காரணம் இரண்டு கட்சிகளின் இழுபறி நிலையே.

எனவே எந்தவொரு காரணம் கொண்டும் இரண்டு தேசிய கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைப்பது இலங்கைக்கு பொருத்தமானதல்ல. இதன் காரணமாக ஒரே கட்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவு செய்தால் அந்த ஆட்சி மக்களுக்கு நன்மை பயக்கும். அதனை உணர்ந்து மக்கள் அணைவரும் ஜனாதிபதி தேர்தலிலும் எதிர்வரும் பொது தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும்.

திருமணம் நடைபெற்றதன் பின்பு கணவனும் மனைவியும் சேர்ந்து பயணித்தால் தான் அந்த குடும்பம் நல்ல குடும்பமாக இலக்கை நோக்கியும் பயணித்து வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியும். அப்படி இல்லாமல் திருமணத்தின் பின்பு இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் எற்பட்டால் அந்த குடும்பம் தனது இலக்கை அடைய முடியாது. சமூதாயத்திலும் அவப்பெயரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நிலையே இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும் எற்பட்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாகவும் ஒத்த கருத்துடனும் ஒரே இலக்கை நோக்கி பயணித்தார்கள். அதன் மூலம் பல வெற்றிகள் கிடைத்தது. பின்பு இருவருக்கும் இடையில் எற்பட்ட கருத்து முரண்பாடு அதன் மூலம் அமைச்சர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஒரே அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிக்க அரம்பித்ததன் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் தனது இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் போய்விட்டது.

இதன் மூலம் நாங்கள் ஒரு சிறந்த பாடத்தை கற்றுக்கொண்டுயிருக்கின்றோம். இந்த தவறை எதிர்காலத்தில் நாம் செய்ய முடியாது. மக்களும் வாக்களிக்கின்ற போது சிந்தித்து ஒரு கட்சிக்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்கின்ற வகையில் வாக்களிப்பார்களேயானால் அந்த ஆட்சி சுமூகமாக கொண்டு செல்ல முடியும்’ என கூறினார்.