ஹாங்காங்கில் ரூ.177 கோடிக்கு ஏலம் போன ஓவியம்

183 0

ஹாங்காங்கில் ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது.

ஹாங்காங்கில் ஓவியங்கள் ஏல விற்பனை நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் யோஷிடோமா நாரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது. ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பெரிய கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும். மற்றொரு கை முதுகுபுறமாக மறைத்து வைத்திருப்பது போல ஓவியம் வரையப்பட்டிருக்கும். “அந்தச் சிறுமி தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்?” என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது.

ஏலம் தொடங்கிய 10 நிமிடத்திற்குள் அந்த ஓவியம் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.177 கோடியே 32 லட்சத்து 12 ஆயிரத்து 500) ஏலம் போனது. யோஷிடோமா நாரா வரைந்த ஓவியங்களிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன ஓவியம் இதுதான்.

இது குறித்து ஏல ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், “யோஷிடோமா நாராவின் ‘நைப் பிகைன்ட் பேக்’ ஓவியத்தை பெற 6 பேர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் ஏலம் அறிவித்த தொகையை விட 5 மடங்கு அதிகமான விலையில் அந்த ஓவியம் ஏலம் போனது” என கூறினர்.