எல்லையில் இந்தியா தாக்கியதில் எங்கள் வீரர்கள் உயிரிழக்கவில்லை

301 0

201610282159453464_pakistan-army-denies-indias-claim-of-killing-15-soldiers-in_secvpfஎல்லையில் நடைபெற்ற சண்டையில் தங்கள் ராணுவ வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்திய நிலைகளையும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தியா கொடுத்த பதிலடியில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர் என்று எல்லைப் பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் அறிவிப்பை பாகிஸ்தான் மறுத்து உள்ளது.

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்தியா கூறுவது முற்றிலும் அடிப்படையற்றது, உண்மையற்றது என்று பாகிஸ்தான் ராணுவ செய்திப் பிரிவான ஐ.எஸ்.பி.ஆர். கூறியுள்ளது.

“பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறுவது எல்லையில் தங்களுடைய இழப்பை மறைக்கும் இந்தியாவின் பிரசாரத்தின் ஒரு பகுதி. காஷ்மீர் பிரச்சனையில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி” என்றும் ஐ.எஸ்.பி.ஆர். குற்றம்சாட்டியுள்ளது.