43 ஆண்டுகள் விடுப்பே எடுக்காமல் வேலைக்குச் சென்ற போலீஸ் அதிகாரி

182 0

சுமார் 43 ஆண்டுகள் விடுப்பே எடுக்காமல் பணியாற்றிய போலீஸ் அதிகாரி ஒருவரை ஐக்கிய அமீரகம் கவுரவித்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் ஒபைத் துனாஜி. இவர் அல் கைமா பகுதியில் போக்குவரத்துத் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தனது 43 ஆண்டுகள் பணிக்காலத்தில் ஒரு முறை கூட விடுப்பு எடுக்காமல் பணிக்குச் சென்றுள்ளார். இதன் காரணமாக அப்துல் ரஹ்மான் தனது பணி ஓய்வில் உயர் அதிகாரிகளால் கவுரவிக்கப்பட்டார்.

ரஹ்மான் குறித்து உயரதிகாரி அலி அப்துல்லா கூறும்போது, “அப்துல் அர்ப்பணிப்பான ஊழியர். தனது பணிக்காலமான 42 ஆண்டுகளில் எந்த விடுப்பும் எடுக்காமல் நிறைவு செய்துள்ளார். இவர் எப்போதும் தனது தொழில் சார்ந்தும், நேரம் தவறாமைக்கும் முன்னுதாரணமாக இருப்பார். அவரது அர்ப்பணிப்பும், சேவையும் அவர் ஆற்றிய துறையின் மேம்பாட்டுக்கு முக்கியப் பங்காற்றின” என்றார்.

இந்நிலையில் அதிகாரிகளால் கவுரவிக்கப்பட்டது குறித்து அப்துல் ரஹ்மான் கூறும்போது, “நான் எனது பணியையே செய்தேன். என்னை உற்சாகப்படுத்திய ஐக்கிய அரபு அதிகாரிகளுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் பலரும் அப்துல் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.