தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? -மு.க.ஸ்டாலின் கேள்வி

211 0

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே உள்ள மேலக்கோட்டையூர் குளத்தில் திருட்டுத்தனமாக மண் அள்ளியவர்களை தாழம்பூர் போலீசார் தடுத்து நிறுத்தி, 3 லாரிகளை பிடித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அடுத்த சில மணி நேரத்தில், லாரிகளைப் பிடித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரின் லாரிகளை பிடித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த செய்தியை சுட்டிக் காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்? ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா?” என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.