எவ­ரு­டைய நிபந்­த­னைக்கும் கட்­டுப்­ப­ட­மாட்டேன்!

295 0

நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ள இந்தப் பய­ண­மா­னது புதிய யுக­மொன்றின் ஆரம்­ப­மாகும். அதனை நாட்டு மக்கள் நன்கு அறி­வார்கள். இது தனிப்­பட்ட பிரி­வி­ன­ரையும் அவர்­க­ளது நலன்­க­ளையும் மையப்­ப­டுத்­தி­ய­தல்ல. சஜித் பிரே­ம­தாஸ ஆகிய நான் எவ­ரு­டைய நிபந்­த­னைக்கும் கட்­டுப்­ப­ட­மாட்டேன் என்­பதை மக்கள் நன்கு அறி­வார்கள்.  என்­னு­டைய தனிப்­பட்ட அர­சியல் ஆதா­யங்­க­ளுக்­காக நிபந்­த­னை­களை ஏற்று செயற்­பட மாட்டேன் என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­திபதி வேட்­பா­ளரும், வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

எனது இந்தப் பய­ண­மா­னது தனிப்­பட்ட பிரி­வி­ன­ரையும், அவர்­க­ளது நலன்­க­ளையும் மையப்­ப­டுத்­தி­ய­தல்ல. மாறாக நாட்டு மக்­களின் நலன்­களை முன்­னி­றுத்­திய பய­ண­மாகும். மற்­ற­வர்­களைப் போன்று தேர்­த­லுக்­காக செல­ வ­ழிப் ­ப­தற்கு என்­னிடம் டொலர்கள் இல்லை. என்­னிடம் இருப்­ப­தெல்லாம் மக்­களின் ஆத­ரவு மாத்­தி­ரமே என்றும் அவர்  கூறினார்.

கொழும்பில் உள்ள அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் நேற்று சனிக்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் சார்பில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நான் பெய­ரி­டப்­பட்ட பின்னர், ஏற்­க­னவே  வெவ்­வேறு கார­ணங்கள் மற்றும் பிரச்­சி­னை­களால் கட்­சி­யி­லி­ருந்து வில­கிச்­சென்­ற­வர்­களை மீண்டும் எம்­மோடு இணைந்து கொள்­ளு­மாறு பகி­ரங்­க­மாக அழைப்பு விடுத்­தி­ருந்தேன். அத­னூ­டாக எதிர்­வரும் அக்­டோபர் 10 ஆம் திக­தி­யி­லி­ருந்து நாட்­டி­னதும், மக்­க­ளி­னதும் நலனை முன்­னி­றுத்­திய புதிய பய­ண­மொன்றை ஆரம்­பிக்க வேண்டும் என்­பதே என்­னு­டைய நோக்­க­மாக இருந்­தது.

அதன்­படி ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த எஸ்.பி.நாவின்ன கடந்த சில­கா­ல­மாக கட்­சியின் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருந்த போதிலும், தற்­போது மீண்டும் எம்­மோடு இணைந்­து­கொண்டு எமக்கு ஆத­ர­வினை வழங்­கு­வ­தற்கு முன்­வந்­தி­ருக்­கின்றார். நாம­னை­வரும் ஒன்­றி­ணைந்து நாட்டின் சுபீட்­ச­மான எதிர்­கா­ல­மொன்றை முன்­னி­றுத்தி ஒன்­றி­ணைந்து பய­ணிக்­க­வி­ருக்­கிறோம்.

கேள்வி : சில நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே உங்­களை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கி­யி­ருப்­ப­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ரான அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கூறி­யி­ருந்தார். அத்­த­கைய நிபந்­த­னைகள் எவை­யேனும் உள்­ளதா?

பதில் : எவ்­வி­த­மான நிபந்­த­னை­களும் விதிக்­கப்­ப­ட­வில்லை. எமது கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அத்­த­கைய கருத்து எத­னையும் கூறி­ய­தாக நான் அறி­ய­வில்லை. சஜித் பிரே­ம­தாஸ ஆகிய நான் எவ­ரு­டைய நிபந்­த­னை­க­ளுக்கும் கட்­டுப்­பட மாட்டேன் என்­பதை மக்கள் நன்கு அறி­வார்கள். என்­னு­டைய தனிப்­பட்ட அர­சியல் ஆதா­யங்­க­ளுக்­காக நான் ஒரு­போதும் நிபந்­த­னை­களை ஏற்றுச் செயற்­பட மாட்டேன்.

கேள்வி : அவ்­வா­றெனின் நீங்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­ய­டைந்தால் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே தொடர்­வாரா?

பதில் : இதற்கு ஏற்­க­னவே நான் பதில் கூறி­யி­ருக்­கிறேன். இது ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­தலே தவிர, பிர­த­மரை நிய­மனம் செய்­வ­தற்­கான தேர்தல் அல்ல என்­பதைப் புரிந்­து­கொள்ள வேண்டும்.

கேள்வி : நீங்கள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் பெய­ரி­டப்­பட்­டதைத் தொடர்ந்து, சில பகு­தி­களில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள் தொடர்பில் உங்­க­ளு­டைய கருத்து என்ன?

பதில் : இத்­த­கைய அசம்­பா­வித சம்­ப­வங்கள் சமூ­கத்தில் உள்ள இன­வா­தி­களால் தூண்­டி­வி­டப்­பட்­ட­தா­கவே நான் கரு­து­கின்றேன். இலங்கை மக்கள் அனை­வரும் முதலில் ஒன்றைத் தெளி­வாகப் புரிந்­து­கொள்ள வேண்டும். இன­வாத செயற்­பா­டுகள் எப்­போதும் நாட்டின் தேசிய பாது­காப்­பிற்குக் கேடு விளை­விப்­ப­தா­கவே அமையும் என்­பதைப் புரிந்­து­கொள்ள வேண்டும். அனை­வரும் சகோ­த­ரத்­துவம் என்ற விட­யத்தைப் பிர­தா­னப்­ப­டுத்தி இன, மத, குல­பே­தங்கள் எவை­யு­மின்றி ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

கேள்வி : உங்­களை போட்­டிக்­கு­ரிய ஒரு வலு­வான வேட்­பா­ள­ராகக் கரு­த­வில்லை என்று எதிர்க்­கட்சித் தலை­வ­ரான மஹிந்த ராஜ­பக்ஷ கூறி­யி­ருந்தார். அது­கு­றித்து உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன? அதே­போன்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன சார்பில் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருக்கும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை எதிர்­கொள்­வது சவா­லா­னது என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில் : அர­சி­யலைப் பொறுத்­த­வ­ரையில், அதில் என்­னு­டைய அனு­பவம் என்­பது மிகவும் உயர்­வா­னது. இவர்­க­ளைப்­போன்ற சிறு­பிள்­ளைத்­த­ன­மான அனு­ப­வ­மல்ல அது என்­பதை உண­ர­வேண்டும். என்னை  பொறுத்த மட்டில்  நாட்டில் அமை­தி­யையும், சுபீட்­சத்­தையும் ஏற்­ப­டுத்­து­வதே சவா­லான விட­ய­மாகும். அதே­போன்று அவை­யி­ரண்டும் நாட்டில் வாழும் குறித்­த­வொரு பிரி­வி­ன­ருக்கு மாத்­தி­ர­மா­ன­தன்றி, அனைத்துத் தரப்­பி­ன­ரையும் சம­ளவில் சென்­ற­டை­வ­தாக இருக்க வேண்டும். அத்­தோடு பொரு­ளா­தார வளர்ச்­சியும் அனைத்து மக்­க­ளாலும் அடை­யப்­படக் கூடி­ய­வ­கையில் சமச்­சீ­ரா­ன­தாக இருக்க வேண்டும்.

கேள்வி : இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலைப் பொறுத்­த­வ­ரையில் உங்­க­ளு­டைய கொள்கைப் பிர­க­டனம் எவ்­வா­றா­ன­தாக அமையும்?

பதில் : எனது கொள்கைப் பிர­க­ட­ன­மா­னது நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் முன்­னி­றுத்தி, எந்­த­வொரு இன, மத, மொழி, குல­பே­தங்­க­ளு­மின்றி, மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்­கத்­தக்க வகையில் கால­வ­ரை­ய­றையைக் கொண்­ட­தாக அமையும்.

கேள்வி : இம்­முறைத் தேர்தல் பிர­சா­ரத்தில் நீங்கள் எத்­த­கைய உத்­தியைக் கையா­ளப்­போ­கின்­றீர்கள்?

பதில் : என்­னு­டைய உத்தி இதுதான் என்று நானே கூறு­வது நன்­றாக இருக்­காது. நான் எவ்­வா­றான உத்­தியைக் கையாள்­கிறேன் என்று நீங்கள் பொறுத்­தி­ருந்து பார்த்துத் தெரிந்து கொள்­ளுங்கள்.

கேள்வி : தற்­போது உங்­க­ளுடன் எஸ்.பி.நாவின்ன இணைந்து கொண்­டதைப் போன்று வேறு யாரேனும் எதிர்­கா­லத்தில் இணைந்­து­கொள்­வார்­களா?

பதில் : என்­னு­டைய கொள்கை மற்றும் செயற்­பா­டு­களைப் புரிந்­து­கொண்டு, அதற்­கேற்ற நிலைப்­பாட்டைக் கொண்ட அனைத்து தரப்­புக்­க­ளு­டனும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன். எனினும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன் தொடர்­பு­பட்டு, அக்­குற்­றங்கள் நிரூ­பிக்­கப்­பட்­ட­வர்­களை இணைத்­து­கொள்ள மாட்டேன். அதனை ஊக்­கு­விக்­கவும் மாட்டேன்.

நான் நாட்­டி­னதும், மக்­க­ளி­னதும் நலன்­களைக் கருத்­திற்­கொண்டு மாத்­தி­ரமே செயற்­ப­டுவேன். நான் அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்ற கார­ணத்தால் எனது அதி­கா­ரத்­தையும், செல்­வாக்­கையும் பயன்­ப­டுத்தி என்­னு­டைய உற­வி­னர்கள், தெரிந்­த­வர்கள் என்று எவ­ரையும் அரச உத்­தி­யோ­கங்­களில், அரச நிறு­வ­னங்­களில் இணைத்­துக்­கொண்­ட­தில்லை. இந்த நாட்­டு­மக்கள் தான் என்­னு­டைய சொந்­தங்கள்.

கேள்வி : அவ்­வா­றெனின் ஜனா­தி­பதித் தேர்­தலில் நீங்கள் வெற்றி பெறு­வீர்கள் என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில் : ஆம் நிச்­ச­ய­மாக. ஜனா­தி­பதித் தேர்­தலில் நான் வெற்­றி­ய­டைவேன் என்­பதில் எவ்­வித சந்­தே­கங்­களும் இல்லை. மக்­களின் நம்­பிக்­கையும், ஆத­ரவும் எனக்கு இருக்­கின்­றது. சஜித் பிரே­ம­தாஸ ஆகிய நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டுள்ள இந்தப் பய­ண­மா­னது புதிய யுக­மொன்றின் ஆரம்பம் என்­பதை நாட்டு மக்­க­ள­னை­வரும் அறிந்­தி­ருக்­கின்­றார்கள். எனினும் இது தனிப்­பட்ட பிரி­வி­ன­ரையும், அவர்­க­ளது நலன்­க­ளையும் மையப்­ப­டுத்­தி­ய­தல்ல. மாறாக நாட்டு மக்­களின் நலன்­களை முன்­னி­றுத்­திய பய­ண­மாகும். மற்­ற­வர்­களைப் போன்று தேர்­த­லுக்­காக செல­வ­ழிப்­ப­தற்கு என்­னிடம் டொலர்கள் இல்லை. என்­னிடம் இருப்­ப­தெல்லாம் மக்­களின் ஆத­ரவு மாத்­தி­ரமே.

கேள்வி : எனின் நீங்கள் வெற்­றிக்­காக எந்த நிபந்­த­னை­க­ளுக்கும் கட்­டுப்­பட மாட்­டீர்­களா?

பதில் : தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­காக தமது கொள்கை உள்­ளிட்ட அனைத்­தையும் விட்­டுக்­கொ­டுக்­கின்ற ஒரு கலா­சா­ரத்­தையே நீங்கள் கண்­டி­ருக்­கி­றீர்கள். ஆகை­யி­னா­லேயே என்­னி­டமும் இந்தக் கேள்­வியை மீண்டும் மீண்டும் கேட்­கின்­றீர்கள். அதி­லி­ருந்து சற்று விலகி வெளியே வாருங்கள்.

கேள்வி : நீங்கள் ஜனா­தி­ப­தி­யானால் சோஃபா, மிலே­னியம் செலென்ஞ் கோப்­ப­ரேஷன் போன்ற சர்ச்­சைக்­கு­ரிய உடன்­ப­டிக்­கை­களின் கைச்­சாத்­தி­டு­வீர்­களா?

பதில் : இவ்­வா­றான சர்­வ­தே­சத்­து­ட­னான ஒப்­பந்­தங்கள் தொடர்பில் மீண்டும் அவ­தானம் செலுத்­தப்­பட்டு, முழு­மை­யாக ஆரா­யப்­படும். அதே­வேளை அவற்றில் வெளிப்­ப­டைத்­தன்­மையும் பேணப்­படும். அர­சியல், பொரு­ளா­தார, சமூக, நிதி­யு­த­வித்­திட்ட, பாது­காப்பு உள்­ளிட்ட வெளி­நா­டு­க­ளு­ட­னான எவ்­வித ஒப்­பந்­தங்கள் என்­றாலும் அவற்றின் அனு­கூ­லங்கள் மற்றும் பிர­தி­கூ­லங்கள் தொடர்பில் முழு­மை­யாக ஆரா­யப்­படும். அதில் ஒரு குறித்த தரப்­பிற்கோ அல்­லது குடும்­பத்­திற்கோ அன்றி, முழு நாட்­டிற்கும் அனு­கூ­லங்கள் கிடைக்­கப்­பெ­று­மாயின் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டுவோம். இவை­ய­னைத்தும் அனை­வரும் அறி­யக்­கூ­டிய வகையில் பூரண வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் மேற்­கொள்­ளப்­படும்.

கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­குமா?

பதில் : அதனை நீங்கள் அவர்­க­ளிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி : நீங்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­ய­டைந்தால் முத­லா­வ­தாக எதனைச் செய்­வீர்கள்?

பதில் : வரி செலுத்தும் மக்­களின் பணத்தில் சுக­போ­கங்­களை அனு­ப­விக்­காமல் அதனை மிகக் குறைந்­த­ளவில் பயன்­ப­டுத்தி, எஞ்­சு­வதை மக்­களின் அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­துவேன். அத­னையே ஜனா­தி­ப­தி­யா­னதும் முதலில் செய்வேன். ஜனா­தி­ப­திக்கு அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் அரச இல்­லங்­க­ளிலோ, பங்­க­ளாக்­க­ளிலோ நான் தங்­க­மாட்டேன்.

கேள்வி : அவ்­வா­றெனின் எங்கு தங்­கு­வீர்கள்?

பதில் : நீங்கள் தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­டைய கேள்வி ஒன்றை எழுப்­பு­கின்­றீர்கள். (சிரிக்­கின்றார்) நான் எங்கு தங்­குவேன் என்­பதைக் கூற­மு­டி­யாது. ஆனால் அரசால் வழங்­கப்­படும் இல்­லங்­களில் தங்­க­மாட்டேன்.

கேள்வி : தற்­போது வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சராக இருக்கின்ற நீங்கள் ஜனாதிபதியான பின்னரும் அதனைத் தொடர்வீர்களா? ஏனெனில் இன்னமும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய வீடமைப்புப் பணிகள் இருக்கின்றன.

பதில் : நான் ஜனாதிபதியான பின்னர் வீடமைப்பு மாத்திரமன்றி அனைத்து விடயங்கள் தொடர்பிலும் வெகுவாக அவதானம் செலுத்துவேன். அனைத்திற்கும் முக்கியத்துவம் வழங்குவேன்.

கேள்வி : தற்போதைய ஆட்சியிலேயே பல்வேறு நபர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வீர்கள்?

பதில் : ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான தனியான கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி : தற்போது பல்வேறு துறைகளிலும் நடைபெறுகின்ற தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்கள் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

பதில் : இவை மிகவும் அநீதியானவையாகும். வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொள்வதற்கும், தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அவற்றில் ஒரு நியாயம் இருக்க வேண்டுமல்லவா? என்னைப் பொறுத்தவரை இந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் அனைத்தும் எதிரணியினரின் தூண்டுதலினால் நடைபெறுகின்றவையே ஆகும்.