எல்பிட்டிய தேர்தலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

272 0

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்து, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த மூவர் இணைந்து தாக்கல் செய்த குறித்த மனு,  புவனேக அலுவிஹார மற்றும் காமின அமரசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனுவினை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் விசாரணைக்கு உட்படுத்தும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, விஜித் மலல்கொட, ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீண்ட பரிசீலனையின் பின்னர் குறித்த மனுவினை விசாரணைக்கு எடுக்க போதுமான சட்ட காரணங்கள் இல்லாததால் மனுவை நிராகரித்து மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் எல்பிட்டிய பிரதேச சபைக்கு பொறுப்பான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் ஆகியோர், பிரதிவாதிகளாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு கூடாமல் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.