தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி யாழில்!

324 0

தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் நடைபயணம்  யாழ். நாவற்குழியை சென்றடையவுள்ளது.

அதற்கமைய குறித்த ஊர்தி இன்று (புதன்கிழமை) நண்பகல் அளவில் நாவற்குழி பகுதியைச் சென்றடையவுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இன அழிப்பு மற்றும் காணாமலாக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகிய நடைபயணம், தியாக தீபத்தின் உருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து  யாழ்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையவுள்ள நிலையில், குறித்த பயணம் நேற்று யாழ். எழுதுமட்டு வாழ் பகுதியினைச் சென்றடைந்தது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் ஆரம்பமாகும் குறித்த பயணமானது இன்று நண்பகல் அளவில் நாவற்குழி பகுதியைச் சென்றடையவுள்ளதாகவும் அங்கு அஞ்சலி நிகழ்வுகள் பல இடம்பெறவுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் நாளை இடம்பெறவுள்ள தியாகி திலீபனின் இறுதி நாள் ஊர்வலத்தில் பங்குபற்ற பெருந்திரளான மக்களை நாளை காலை நாவற்குழு சந்தியில் ஒன்றுகூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை ஆரம்பிக்கவுள்ள தியாகி திலீபனின் நடைபயணம், நல்லூரில் உள்ள அவரது நினைவுத்தூபியை சென்றடையவுள்ளதுடன், அங்கு அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.