ஆளுநரானாலும் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடக்கும்: தமிழிசை வழக்கறிஞர்

1030 0

தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், கனிமொழி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம், ஒத்திவைத்துள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை, ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் வழங்கினார் என்றும் அவரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மக்கள் ஒரு வேட்பாளரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், தன் கணவரின் வருமானத்தை கனிமொழி மறைத்தது தவறு எனவும், பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் வாக்காளர் சந்தான குமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், ஏற்கெனவே தமிழிசை தரப்பில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தனியாக ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்துப் பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த இரு வழக்குகளிலும் கனிமொழி உட்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் 23- ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பின்னர் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தாலும், ஆளுநர் பதவி வழங்கப்படுவதற்கு முன்னதாக கனிமொழிக்கு எதிராக அவர் தொடுத்த தேர்தல் வழக்கு தொடர்ந்து நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.