ஐ.தே.கட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர்-தினேஷ்

333 0

நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வினையும் பெற்றுத்தராத ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இதுவரையும் ஜனாதிபதி தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும், கட்சியின் வேலைத் திட்டங்கள் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி தற்போது பாரிய பிரச்சினையில் உள்ளது. அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியவில்லை, நாட்டு மக்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை. அவர்கள் நெருக்கடிக்குள் உள்ளனர்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வினையும் பெற்றுத்தர முடியாத தரப்பினர் ஆட்சிக்கு வந்ததால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக பொதுமக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்து விட்டனர்.

கடந்த 4 வருடங்களாக நாட்டிற்கு செய்த சேதங்களுக்காக அவர்களை விரட்டியடிக்க பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.