சென்னையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ கடந்த 12ம் தேதி பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் சென்டர்மீடியனில் வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’ காற்றில் சரிந்து சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீயின் முன்னால் திடீரென விழுந்தது.
நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குரோம்பேட்டை சென்று சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்று, சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றனர்.

பேனர் மரணம் குறித்து கேள்விப்பட்டதும், நாங்களே முன்வந்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தோம். அதில், நாங்கள் சட்டத்தை மீறி அனுமதி இல்லாமல் எங்கும் பேனர் வைக்கமாட்டடோம் என்று கூறி உள்ளோம்.
திமுக நிகழ்ச்சிகள் நடத்தும்போது, அடையாளத்திற்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் அனுமதி பெற்று பேனர் வைத்து விட்டு நிகழ்ச்சியை நடத்தவேண்டும். அதைமீறி யாராவது வைத்தால் திமுக நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தது மட்டுமல்லாமல், நீதிமன்றத்திலும் கூறி உள்ளோம். என்னைப் பொருத்தவரை பேனர் கலாச்சாரம் இருக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து.
பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம். என்னதான் நிதி உதவி வழங்கினாலும் அவர்களுக்கு அது ஆறுதலாக அமையாது. அவரது தாய், தந்தைக்கு ஆறுதலை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.
பேனர் வைத்தது தொடர்பான வழக்கில் அரசு நினைத்தால் அடுத்தவினாடியே குற்றவாளியை கைது செய்திருக்கலாம். ஆனால் நாடகமாடுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

