பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சம்பந்தன

289 0

4d46sampanthan_25102016_kaa_cmyபல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் சட்டரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது பின்பகுதியிலிருந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் எவ்வாறு மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருக்கும் என்ற சந்தேகத்தையும் அவர் முன்வைத்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பல்கலைக்கழக மாணவர்களும் வீதி விபத்தில் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், மறுநாள் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியமை தெரியவந்தது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்தது.

பின்னால் இருந்து சென்றவர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் உத்தரவிட்டபோதும், நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகப் பொலிஸார் தற்பொழுது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்.

சட்டத்துக்கு முரணான பொலிஸாரின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதுடன், பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவருக்கு துப்பாக்கிச் சூடு படாது ஓட்டிச் சென்றவர் மீது எவ்வாறு குண்டு பாய்ந்தது என்ற உண்மையும் பக்கச்சார்பற்ற விசாரணைகளில் கண்டறியப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியிருந்ததுடன், அரசாங்கம் எடுத்திருக்கும் முதற்கட்ட நடவடிக்கை குறித்து நன்றி தெரிவிக்கின்றோம்.

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதுள்ள நிலையில், மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.