கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக கடலிலிருந்து பாரிய அளவில் மணல் அகலப்பட்டதன் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களிலும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
நீர்கொழும்பில் பிட்டிபனை, மோரவல மற்றும் நீர்கொழும்பு முதல் கம்மல் தொட்ட பகுதி வரையுள்ள பல இடங்களிலும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகள் சிலவும் கட்டிடங்கள் சிலவும் சேதமடைந்துள்ளன.
நீர்கொழும்பு கொட்டுவ மைதானத்துக்கு அருகில் அமைந்துள்ள நீர்கொழும்பு மீன் விற்பனை சந்தையின் பின்பக்கமாக உள்ள குட்டித்தீவு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றும் அண்மையில் கடல் நீர் புகுந்ததன் காரணமாக சேதமடைந்துள்ளது. அத்துடன் அந்தப் பகுதி கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நீர்கொழும்பு மீனவ செயற்பாட்டாளர் வர்ணகுலசூரிய நாமல் பெர்ணாந்து, நீர்கொழும்பு தேவதயாவ கிராமிய மீனவர் சங்கத்தின் தலைவர் ஜூட் எக்டர், புனித ஜெபமாலை மாதா கிராமிய மீனவர் சங்கத்தின் தலைவர் மெக்ஸிமன் கூஞ்ஞ உட்பட பிரதேசவாசிகள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.
கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக கடலிலிருந்து பாரிய அளவில் மணல் எடுக்கப்பட்டதன் காரணமாக பிட்டிபனை, மோரவல, குட்டித்தீவு மற்றும் நீர்கொழும்பு முதல் கம்மல்தொட்ட வரையுள்ள கடல் பகுதி மற்றும் திக்கோவிட்ட உட்பட பல பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
பாரிய அளவில் மணல் கடலிலிருந்து எடுக்கப்பட்டதன் காரணமாக கடல் வளங்கள் பல அழிந்துள்ளன. மீன் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக சிறு மீன் பிடித் துறையினர் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நீர்கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் 3000 வரையான படகுகளில் சென்று சிறு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலரிப்புக் காரணமாக வீடுகள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலை நீடித்தால் இன்னும் சில காலங்களில் மேலும் பல வீடுகள், கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.