சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

224 0

14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை வந்தடைந்தார்.

தமிழகத்தை தொழில்துறையில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் நகரம் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக கடந்த மாதம் 28-ந் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அரங்கில் பேசும்போது, ‘இந்தியாவிலேயே முதலீடு செய்ய ஏற்ற மாநிலம் தமிழகம் தான்’ என்று கூறினார். இதையடுத்து புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்டதோடு, அதுதொடர்பான தொழில்நுட்பங்களையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.  மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு குறித்து இங்கிலாந்து நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொழில் அதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்கள், வெளிநாடு வாழ் தமிழ் தொழில் அதிபர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின்போது தமிழகத்தில் ரூ.5 ஆயிரத்து 80 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த, எடப்பாடி பழனிசாமி தனது 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்தார்.  முதல்வரை வரவேற்க அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் விமான நிலையம் வருகை தந்தனர்.