539 வடமத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

362 0

கல்வித்துறையின் சிறந்த முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்களது அறிவை இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (09) முற்பகல் கெக்கிராவ மத்திய கல்லூரி கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற வடமத்திய மாகாண பட்டதாரி ஆசியர்கள் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அறிவு மற்றும் மாறிவரும் உலகிற்கேற்ற ஆக்கத்திறன்களை கொண்டவர்களாக எதிர்கால தலைமுறையை உருவாக்குவதைப்போன்று நவீன தொழிநுட்பத்துடன் முன்னோக்கி செல்லக்கூடிய மாணவர்களின் ஆன்மீக துறையையும் வளர்த்து, சிறந்ததோர் தலைமுறையை கட்டியெழுப்புவது ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 428 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள், 100 தமிழ் மொழி மூலமான ஆசிரியர்கள், 11 ஆங்கில மொழி மூலமான ஆசிரியர்கள் உள்ளிட்ட 539 பேர்களுக்கு இதன்போது ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, வீரகுமார திசாநாயக்க, சந்திம கமகே ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகார்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.