கூடலூரில் 3 பெண் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை

345 0

குடும்ப பிரச்சனையில் 3 பெண் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகன். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.இவரது மனைவி வினிதா (34). இவர்களுக்கு அபித்ஷா (12), அக்‌ஷிதா (10), அனுசுயா (8) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மதியம் 2.30 மணியளவில் வினிதா தனது 3 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்தார். பின்னர் தானும் வி‌ஷம் குடித்தார். இதில் 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு வினிதா பரிதாபமாக இறந்தார். அபித்ஷா, அக்‌ஷிதா, அனுசுயா ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

குடும்ப பிரச்சனை காரணமாக வினிதா தனது குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வினிதாவின் கணவர் முருகனிடமும் விசாரணை நடை பெற்று வருகிறது.

3 பெண் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.