உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு!

243 0

வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி உதயச்சந்திரா இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகணங்களைச் சேர்ந்த காணமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து ஓமந்தையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 5 மாவட்ட மக்கள் ஓமந்தையிலும் 3 மாவட்ட மக்கள் கல்முனையிலும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

ஓமந்தையிலேயே அதிகளவான எமது பிள்ளைகளை குடும்பம் குடும்பமாக இராணுவத்திடம் கையளித்தோம். அதன் அடிப்படையிலேயே அங்கு போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்தோம்.

எங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அனைவருக்கும் நாம் பகிரங்க அழைப்பு விடுக்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.