கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

339 0

இலங்கை 3 வது பாரிய நீர்த்தேக்கமான கீழ் மல்வத்து ஓயா தந்திரி மலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (25) காலை இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சுற்றாடலுக்குப் பொருத்தமான வகையிலான திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வில்பத்து வனஜீவராசிகள் வலயத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கத்தினால் நீரில் மூழ்கும் தந்திரிமலை கிராமத்திற்குப் பதிலாக பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நீர்த்தேக்கத்தினால் நீரில் மூழ்கும் காணி மற்றும் சொத்துக்களுக்காக விரைவாக நஷ்டஈடு வழங்கப்படும். இந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதற்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்குமான பணிகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும். தந்திரிமலை நன்னீர் கடற்றொழில் கிராமம் ஒன்று அமைக்கப்படும் இதற்காக பல கைத்தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும்.

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்தின் மூலம் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளன. இரண்டாயிரம் ஏக்கரில் புதிதாக நெல்லை உற்பத்தி செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 30 ஆயிரம் ஏக்கர் வயற்காணிகளுக்கு நீர்விநியோகமும் வழங்கப்படும்.

இந்த மாவட்டங்களில் உள்ள மக்களின் நீர்த் தேவையையும் பூர்த்தி செய்யவும் திட்டத்தின் மூலம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக 1200 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.