ஜோலார்பேட்டையில் இருந்து இதுவரை சென்னைக்கு ரெயிலில் 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு உத்தரவின்படி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் ஜூலை 12-ந் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது.
ஒரு தடவை ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல ரூ.8.6 லட்சம் தமிழக அரசுக்கு செலவாகிறது. இதன் மூலம் ரெயில்வே நிர்வாகம் இதுவரை ரூ.4.73 கோடி சம்பாதித்துள்ளது.
12-ந் தேதியில் இருந்து நேற்று வரை 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த குடிநீர் சென்னை மாநகர மேற்கு பகுதிகளில் சப்ளை செய்யப்படுகிறது.
சென்னைக்கு திட்டமிட்டபடி தினமும் 10 மில்லியன் லிட்டர் கொண்டு செல்ல முடியவில்லை இதனால் கூடுதலாக 2 ரெயில்கள் இயக்க வேண்டுமென மெட்ரோ அதிகாரிகள் ரெயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதையடுத்து 3-வது ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மேலும் ஒரு ரெயில் வரவழைக்கபட்டு இந்த வாரம் 3-வது ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ரெயில்வே நிர்வாகம் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் திட்டம் தொடங்கி இன்றுடன் 1 மாதம் நிறைவடைந்த நிலையில், திட்டமிட்டப்படி 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.