கோட்டாபய ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் இல்லை-ரவி

454 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியுள்ளமையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இல்லை என்று அக்கட்சியின் உபதலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில், இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ரவி மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்று ஏனையக் கட்சிகளும் விரைவில் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளன.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி பலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத்தான் இம்முறைத் தேர்தலில் களமிறக்கும்.

அவ்வாறு நாட்டை நேசிக்கக்கூடிய ஒருவரை நாம் விரைவில் அறிவிப்போம். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை நாம் எப்போதும் சவாலாக கருதவில்லை.  கட்சியிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்தே ஒரு முடிவினை எடுப்போம்.

எமது கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்கள். ஊடகங்கள்தான் சில விடயங்களை பெரிதுப்படுத்துகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை கூட்டணியுடன்தான் இந்தத் தேர்தலை சந்திக்கும். தனியாக களமிறங்கினால் வெற்றி பெறமுடியும் என்றாலும், கூட்டணியுடன்தான் களமிறங்குவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.