கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

252 0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பதுரியா நகரைச் சேர்ந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடி பதுரியா நகர் மீனவர் சங்க வீதியைச் சேர்ந்த உசனார் ராஹிலா (வயது 52) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சனிக்கிழமை இரவு காணாமல் போன நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் செம்மண்ணோடை, கொண்டயன்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் சகோதரனின் மகன் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்தோடு குறித்த நபர் பல வருடங்களுக்கு முன்னர் காவத்தமுனையில் அமைந்துள்ளதுள்ள விசேட தேவையுடையோர் பாடசாலையில் கல்விகற்ற சிறுவன் ஒருவனை சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்தவர் என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.