நானும் துப்பாக்கி தூக்குவேன் – காஸ்மீரிலிருந்து ஒரு குரல் – பிபிசி

566 0

கீதா பாண்டே – பிபிசி

தமிழில் ரஜீபன்

ஸ்ரீநகரில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில்  முக்கியமானது கன்யார்.

இந்த பகுதிக்கு ஊரடங்கு நேரத்தில் செல்வதற்கு நாங்கள் பல வீதிதடைகளை கடந்து செல்லவேண்டியிருந்தது.

நாங்கள் மற்றுமொரு வீதிதடையை எதிர்கொண்டவேளை நான் கீழே இறங்கி படமெடுக்க ஆரம்பித்தேன்.

அவ்வேளை ஒழுங்கை போன்ற பகுதியிலிருந்து வெளியே வந்த சிலர் முற்றுகைக்குள் வாழ்வது போன்று உணர்வதாக என்னிடம் முறைப்பாடு செய்தனர்.

இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிகவும் அடாவடித்தனமானது என அவர்கள் மத்தியில் காணப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்தார்.

துணைஇராணுவத்தினர் எங்களை அங்கிருந்து அழைத்துசெல்ல முயன்றனர் ஆனால் அங்கு காணப்பட்ட மக்கள் அவர்கள் தெரிவிப்பதை நாங்கள் செவிமடுக்கவேண்டும் என எதிர்பார்த்தனர்.

நீங்கள் பகலில் எங்களை நடமாட முடியாமல் தடுத்துவைக்கின்றீர்கள் இரவிலும் அதனையே செய்கின்றீர்கள் என  அங்கு காணப்ப்பட்ட ஒருவர் சீற்றத்துடன் கூச்சலிட்டார்.

காவல்துறையினர் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் அவர்களை அங்கிருந்து உடனடியாக செல்லுமாறு உத்தரவிட்டனர்.

ஆனால் அந்த முதியவர் அதனை ஏற்க மறுத்ததுடன் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்தவேளை என்னை அங்கிருந்து புறப்படுமாறு கேட்டுக்கொண்டனர்,நான் அங்கிருந்து வெளியேறுவதற்குள் நபர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் என்னை நோக்கி வந்து தான் இந்தியாவிற்கு எதிராக போராடுவதற்காக துப்பாக்கியேந்த தயார் என தெரிவித்தார்.

இது எனது ஒரே மகன் இவன் தற்போது குழந்தை ஆனால் நான் மகனையும் துப்பாக்கி  ஏந்துபவனாக மாற்றுவேன்   அதற்கு தயார் செய்வேன் என அவர் தெரிவித்தார்.

அவர் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டார் எனக்கு அருகில் காவல்துறையினர் நிற்பதையும் அலட்சியப்படுத்தி அவர் இதனை தெரிவித்தார்.

காஸ்மீர் பள்ளத்தாக்கில் நான் சந்தித்த பல இளைஞர்கள் தாங்கள் பாதுகாப்பு படையினர் குறித்த அச்சத்தின் மத்தியில் வாழ தயாரில்லை என தெரிவித்தனர்.

புதுடில்லியிலிருந்த வந்த சர்வாதிகார உத்தரவு பிரிவினைவாதத்தை ஆதரிக்காதவர்களை தனிமைப்படுத்தி விட்டது என அவர்கள் குறிப்பிட்டனர்.

நான் சென்ற இடமெல்லாம் இந்த உணர்வை காணமுடிந்தது.

சீற்றமும் கவலையும் கலந்த முகங்களையும் இந்திய மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதற்கானன கடும் உறுதிப்பாடும் தென்பட்;டது.

கடந்த திங்கட்கிழமை முதல் ஸ்ரீநகர் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.அந்த நகரம் மயானபூமி போல காணப்படுகின்றது.கடைகள் பாடசாலைகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து சேவைகள் எவையும் இயங்கவில்லை.

வெறிச்சோடிக்காணப்படுகின்ற வீதிகளில் ஆயிரக்கணக்கான இந்திய படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்கள் வீடுகளிற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

ஒருவார காலத்திற்கு மேலாக இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் மற்றொரு முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

செயற்பாட்டாளர்கள் பேராசிரியர்கள் உட்பட மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் தற்காலிக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

காஸ்மீர் தற்போது பெரிய சிறைச்சாலை திறந்தவெளி சிறைச்சாலை என்கின்றார் ரிஸ்வான் மாலிக். அவர் எவருடனும் நாங்கள் கதைக்க முடியாத நிலையேற்பட்டது இதுவே முதல் தடவை என்கின்றார்.

நான் ஒருபோதும் இவ்வாறான அனுபவத்தை எதிர்கொண்டதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

காஸ்மீரிற்கு குறிப்பிடத்தக்க சுயாட்சியை வழங்கிய -இந்தியாவுடனான காஸ்மீரின் உறவினை ஆதரித்த விசேட அந்தஸ்த்தை மக்களின் கருத்தினை அறியாமல் இந்தியா நீக்கியது குறித்து அவர் கடும் சீற்றமடைந்துள்ளார்.

அவர் ஒருபோதும் பிரிவினைவாதத்தில் நம்பிக்கை கொண்டவர் அல்ல,ஆர்ப்பாட்டங்களின் போது படையினர் மீது கல்வீச்சினை மேற்கொண்டவரும் இல்லை,அவர் புதுடில்லியில் கணக்காளராக பணியாற்றுவதற்காக கல்வி கற்கும் ஒருவர்.

இந்தியாவின் பொருளதார வெற்றிகாரணமாக இந்தியா என்ற எண்ணக்கருவில் தான் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தேன் என அவர் தெரிவிக்கின்றார்.

இந்தியா என்பது ஜனநாயகம் என நாங்கள் நம்பவேண்டும் என இந்தியா நினைத்தால் அவர்கள் எங்களை ஏமாற்றுகின்றனர்,என தெரிவிக்கும் அவர் இந்தியாவுடன் காஸ்மீரிற்கு எப்போதும் பதட்டமான உறவு காணப்பட்டது அந்த இடைவெளியை நிரப்பியது இந்த  விசேட அந்தஸ்த்தே என சுட்டிக்காட்டுகின்றார்.

விசேட அந்தஸ்த்தை நீக்கியதன் மூலம் அவர்கள் எங்கள் அடையாளத்தை பறித்துவிட்டனர் இதனை எந்த காஸ்மீர் பிரஜையாலும் ஏற்க முடியாது என அவர் தெரிவிக்கின்றார்.

தற்போதைய முற்றுகை முடிவிற்கு வந்ததும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்குவார்கள் காஸ்மீரின் ஒவ்வொரு பிரஜையும் அவர்களுடன் இணையக்கூடும் என மலிக் தெரிவிக்கின்றார்.

இந்த நாள் வரை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் தீவிரவாதிகளுடனும் மற்றையவர் இந்திய அரசாங்கத்துடனும் என்ற நிலை காணப்பட்டது, இந்திய அரசின் இந்த நடவடிக்கை இருதரப்பினரையும் இணைத்துவிட்டது என அவர் குறிப்பிடுகின்றார்.

அவரது சகோதரி ருக்சார் ரசீத் காஸ்மீர் பல்கலைகழக மாணவி.

இந்திய உள்துறை அமைச்சரின் உரையை தொலைக்காட்சியில் கேட்டதும் எனது கரங்கள் நடுங்கதொடங்கிவிட்டன எனது தாய் அழத்தொடங்கிவிட்டார் என அவர் தெரிவிக்கின்றார்.

இதனை விட மரணம் சிறந்த விடயம் என எனது தாய் தெரிவித்தார் என்கின்றார்  ருக்சார் ரசீத்.

காஸ்மீரில் தற்போது காணப்படுவது புயலிற்கு முந்தைய அமைதி என்கின்றார்  பாடசாலை மாணவி முக்சான் லத்தீவ்

சமுத்திரம் அமைதியாகயிருப்பதை போன்றது இது,ஆனால் சுனாமி விரைவில் கரையை தாக்கப்போகின்றது என அவர் குறிப்பிட்டார்.