பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவிருக்கும் அந்தக் கட்சியின் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் மஹிந்த ராஜபக் ஷ கட்சியின் தலைவராக பங்கேற்கவுள்ளதுடன், தமது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரையும் அறிவிக்கவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து, கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூடி ஆராய்ந்திருந்தனர்.
இதன்போது, மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என ஒரு தரப்பும், பங்கேற்கக்கூடாது என மற்றொரு தரப்பும் வாதிட்டன.
இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான முடிவு இன்னமும் எடுக்கப்படாத நிலையில், பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரியிருந்தார். அதன் பின்னர் அவர் நேற்றுமுன்தினம் அதிகாலை கம்போடியாவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்.
சுதந்திரக் கட்சியின் இந்த முடிவை நேற்றுமுன்தினம் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தார்.
எனினும், சுதந்திரக் கட்சி தலைமையின் இந்த முடிவுக்குக் கட்டுப்படப் போவதில்லை என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தயாசிறி ஜயசேகர தவிர்ந்த சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தாம் ஆசி வழங்கப் போவதாகவும் அவர் கூறினார்.
தானும் இந்த மாநாட்டில் பங்கேற்கப்போவதாக, சுதந்திரக் கட்சியின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேராவும் கூறியுள்ளார். இதற்கிடையே இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படுகின்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை மாநாட்டில் பங்கேற்க தடைவிதித்துள்ளமை குறித்து பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி அடைந்துள்ளது.