கஜூ ஏற்றி சென்ற லொறி விபத்துக்குள்ளானது

288 0

மட்டகளப்பு -ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலைக்கு கஜூ ஏற்றி  சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானத்தில் இருவர் காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டகளப்பு ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலை பகுதிக்கு 15 தொன் கஜூ விதைகள் ஏற்றி சென்ற கனரக லொறி ஒன்றே ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் எனும் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டகளப்பு ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா ஊடாக லிந்துலை பகுதியை நோக்கி பயணித்த கனரக வாகனத்தின் தடுப்பு கட்டை இயங்காமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கனரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் தப்பியதன் காரணமாக இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.