தற்கொலைப் படை தாக்குதலுக்கு தயாரான ஐஎஸ் இளைஞன்

284 0

is-2ஐஎஸ் இயக்கத்தினரால் மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் தன்னுடைய மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் வீடியோவை ஐஸ் இயக்கத்தினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஐஎஸ் இயக்கத்தினரிடையே அடுத்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு யார் என்பதை முடிவெடுப்பதற்கு ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதாவது கையில் ஒரு கல்லை எடுத்துக் கொண்டு மறைத்து வைத்து, அதன் பின்னர் அதை சுற்றி, இந்த இரு கைகளில் கல் எதில் இருக்கிறது என்று கூறவேண்டும். அதை சரியாக கூறுபவர்களே அடுத்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு தகுதியானவர்கள் என்பதை போன்று போட்டி நடத்தப்பட்டது.

இதில் இரு இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் சரியாக கல் இருக்கும் கையை காட்டியவுடன் அவர் அடைந்த சந்தோசத்தை வார்த்தையால் கூறமுடியாது. அந்த அளவிற்கு அவர் சந்தோஷம் அடைகிறார். அவரை அந்த அளவிற்கு ஐஎஸ் இயக்கத்தினர் மூளைச் சலவை செய்துள்ளனர்.

அதன் பின்னர் தன் நண்பர் தற்கொலைப் படை தாக்குதல் செய்யப் போகிறான் என்பதை அறிந்த சக தீவிரவாதிகள், அவரை கட்டி அணைத்து வழி அனுப்பி வைக்கின்றனர். அந்த இளைஞரோ மகிழ்ச்சியாக தான் இறக்கப்போகிறேன் என்பதை தெரிந்தும் கூட தற்கொலைப் படை தாக்குதலுக்கு தயாரான வாகனத்தில் ஏறி ஓட்டிச் செல்கிறார். அந்த வாகனம் முழுவதும் குண்டுகள் நிரப்பப்பட்டிருந்தன.

சிறிது தூரம் சென்றவுடன் அந்த இளைஞன் சென்ற வாகனம் வெடித்துச் சிதறி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.

இச்சம்பவத்தை ஐஎஸ் இயக்கத்தினர் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்து அனுப்பியுள்ளனர். மேலும் தங்களால் எந்த ஒரு நபரையும் மூளைச்சலவை செய்து எங்கள் இயக்கத்தில் சேர்த்துவிடுவேம் என்பதை உணர்த்துவதற்காகவே அவர்கள் இது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.