போலியான வாக்குறுதிகளினால் தமிழ் மக்களை கூட்டமைப்பினர் ஏமாற்றியுள்ளனர் – அபேவர்தன 

355 0

வட மாகாண முன்னாள்  முதலமைச்சர்  சி. வி  விக்னேஷ்வனுடனான தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு  மாகாண சபை தேர்தல் தொடர்பில் எவ்வித அழுத்தத்தையும் அரசாங்கத்திற்கு கொடுக்கவில்லை.

போலியான வாக்குறுதிகளினால் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் இன்று கூட்டமைப்பினர் ஏமாற்றியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷமன்  யாப்பா அபேவர்தன  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்  கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பொதுஜன பெரமுன  பயணிக்கும் .

பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல்  தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் , ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுனவிற்கும் இடையிலான  பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுஜன  பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னர்   சுதந்திர கட்சி  ஒரு சிறந்த தீர்வினை  வழங்கும் என  எதிர்பார்க்கின்றோம்.

வரலாற்று பின்னியை கொண்டுள்ள  சுதந்திர கட்சியுடன் ஒன்றினைந்து செயற்படுவதே எதிர் தரப்பினரது பிரதான நோக்கமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.