யாழில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம்

283 0

பருத்தித்துறை, தம்பசிட்டிப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று  மாலை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம், பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் சுப்ரமணியம் மற்றும் சட்ட மருத்துவ நிபுணர் ஆகியோர் பார்வையிட்ட பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

தம்பசிட்டி கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதியைச் சேர்ந்த  ஜெகநாத குருக்கள் கிருபாலினி (வயது -35) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

குறித்த பெண், யாழ்ப்பாணம் பொலிஸ் திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையற்றுகிறார். அவரது கணவர் பூசகர் என்பதுடன் அவர் தற்போது அரச வேலை செய்கின்றார்.

குறித்த சடலத்தில், கைகள் பின்பக்கமாக கயிற்றால் கட்டப்பட்டிருந்ததுடன், கால்களும் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் பஞ்சாபி துணி சுற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின்னரே கொலையா? தற்கொலையா? எனக் கூறமுடியும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.